காட்பாடி: அசாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சென்னை வழியாக பெங்களூரு செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் பிற்பகலில் காட்பாடி ரயில் நிலையம் வந்தது. ரயிலிலிருந்து இறங்கிய 3 பயணிகள் சந்தேகப்படும் வகையில் 13 பெரிய பைகளை வேகவேகமாக இறக்கினர்.
இவற்றைக் கவனித்த ரயில்வே போலிசார் (ஆர்பிஎஃப்) பைகளைச் சோதனை செய்தனர். அதில், தென்கொரிய நாட்டின் சிகரெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். உரிய அனுமதியின்றி சிகரெட்டுகளை மூவரும் கடத்திவந்துள்ளனர். விசாரணையில், அவர்கள் சென்னை ராயபுரம் முல்லை நகரைச் சேர்ந்த கார்த்திக் (30), பாலமுருகன் (28), சுப்பிரமணி (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் கிடைக்கும் சிகரெட்டைவிட உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை தென்கொரிய சிகரெட்டுகள் என போலிசார் கூறினர். மொத்த சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்த ரயில்வே போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

