மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.
இதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருகட்சிகளும் 135 தொகுதிகளில் போட்டியிடவும் எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கவும் தொடக்கத்தில் முடிவு செய்தன.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்குக் கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும் சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக கூடுதலாக வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. சிவசேனாவுக்கு 120 தொகுதிகள் மட்டுமே வழங்க பாஜக முன் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க சிவசேனா மறுத்து வருகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.

