புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்படும் நாள் விரைவில் வரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (படம்) நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது அரசு 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் எஸ்.ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைப் பொறுத்தவரை நமது நிலைப்பாடு தெளிவானது.
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
“ஒருநாள் அப்பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் என எதிர்பார்க்கிறோம்.
“அண்டை நாடுகளுடன் சிறந்த மற்றும் வலுவான உறவை கட்டமைக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
“ஆனால் ஓர் அண்டை நாட்டிடம் இருந்து நமக்குத் தனித்துவமான சவால் வருகிறது.
“எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினைக்கு வெற்றிகரமாக தீர்வு காணப்படும் வரையிலும் அந்த அண்டை நாடு இயல்பான அண்டை நாடாக மாறும் வரையிலும் அந்தச் சவால் நீடிக்கும்.
“ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியா-பாகிஸ்தான் இடையி லான பிரச்சினை ஆகாது. ஆனால் இந்த வட்டாரத்தில் பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதமே இரு நாடுகள் இடையிலான பிரச்சினை ஆகும்.
“இதனை நாம் உலகம் உணரச் செய்யவேண்டும். அண்டை நாட்டுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்களுக்கு வெளிப்படையாகத் துணை போகும் நாட்டை உலகில் நாம் எங்கும் காணமுடியாது,” என்று கூறியுள்ளார் ஜெய்சங்கர்.