மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று வேலைநிறுத்தம் செய்யும் அதிரடி நடவடிக்கையில் டெல்லியின் வாகன ஓட்டுநர் சங்கங்கள் இறங்கின. இதனால் டெல்லியில் நேற்று வாகன போக்குவரத்து 90 விழுக்காடு குறைந்தது.
வாகன வேலைநிறுத்தம் காரணமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து டெல்லியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
அதிக அபராதம் விதிக்கும் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஐக்கிய முன்னணி போக்குவரத்துக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தக் கோரிக்கையை மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் ஏற்கவில்லை.
இதன் தொடர்பில் ஐக்கிய முன்னணி போக்குவரத்துக் கழக பொதுச்செயலாளர் ஷியாம்லால், “கடந்த 15 நாட்களாக நாங்கள் பல தடவை கோரிக்கை விடுத்தும் அரசுகள் கண்டு கொள்ளவில்லை.
எனவேதான் வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார்.
மேலும் டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை என்று தெரிவித்தார். நேற்று காலை ஆறு மணிக்குத் தொடங்கிய வாகன வேலைநிறுத்தம் இரவு 9.35 மணி வரை நீடித்தது.
பேருந்து போக்குவரத்து, ஆட்டோ, டெம்போ, மேக்சி, டாக்சி ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்தச் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அண்மையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியதில் வாகனம் ஓட்டுநர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராதக் கட்டணம் பல மடங்குக்கு உயர்த்தப்பட்டது. அதேபோல் சாலை விதிமீறல்களுக்குப் பத்து மடங்கு அபராதத் தொகையை உயர்த்தியது. இதைக் குறைக்க வலியுறுத்தியே இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் நடந்தது.
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை 4.65 லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 35 லட்சம் லாரிகள் ஓடவில்லை. 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்தியா முழுவதும் சுமார் 45 லட்சம் லாரிகள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.