தற்போது மலேசியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் மத போதகர் ஸாகிர் நாயக்கை ஒப்படைக்க வேண்டி இந்திய பிரதமர் மோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரஷ்யாவில் திரு மகாதீரைச் சந்தித்தபோது, ஸாகீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டி திரு மோடி கோரினார் என்று அப்போது இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விஜய் கோகலே கூறினார்.
ஆனால் ஸாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் மோடி தம்மிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்று திரு மகாதீர் அண்மையில் மலேசிய வானொலி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் அப்போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என திரு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜாகிரை மலேசியாவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தியா கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு ஸாகிர் நாயக்கிற்கு எதிராக மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.