உலகத்தர வசதிகளை உருவாக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

உலகத்தர வசதிகளை உருவாக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

2 mins read
35411a01-9f64-4292-b1f3-882dee448593
-

சென்னை: அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டு தாயகம் திரும்பி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அனைத்துலக உயர்தரமிக்க உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்படி அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்து இருக்கிறார்.

சென்னையில் நடந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், மாநிலத்தில் பல அடிப்படை வசதிக்கான திட்டங்களை அமல்படுத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவித்து உள்ளது.

ஐரோப்பா, அமெரிக்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அதிகாரிகளிடம் விளக்கிய முதல்வர், தமிழ்நாட்டில் பரிசீலனையில் உள்ள பல திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க ரூ. 290 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் திட்டம், சென்னை வாகன நிறுத்திவைப்பிட திட்டம், பேருந்து நவீன பணிமனைத் திட்டம், இலகுரக ரயில் திட்டம், கடல் அருங்காட்சியகம், வெளி வட்டச் சாலை தொழில் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை பரிசீலனையில் உள்ள திட்டங்களில் சில என்று செய்திக்குறிப்பு தெரிவித்தது.

சென்னையில் அறிவுசார் காட்சியகம், எம்ஜிஆர் திரைப்பட நகரில் பொழுதுபோக்கு காட்சியகம், சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்டம், சென்னை- பெங்களூரு தொழில்வழித்தட திட்டம், பல நகர் கழிவு நீர் மறுசுழற்சித் திட்டம், கடல்நீர் சுத்திகரிப்புத் திட்டம் முதலானவையும் தமிழக அரசாங்கம் உத்தேசித்து இருக்கும் இதர திட்டங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கடந்த மாதம் பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சுமார் 14 நாட்கள் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் விளைவாக பல்வேறு துறைகளில் மொத்தம் ரூ. 9,000 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததாக முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட தமிழக முதல்வர், பழனிசாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.