புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நாற்காலி, தலையணை வழங்க அனுமதிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நீதிமன்றக் காவல் தொடர்பாக நேற்று சிதம்பரம் சிறப்பு நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தமது சிறை அறைக்கு வெளியே ஒரு நாற்காலியில் வழக்கமாக அமருவார். ஆனால் அந்த நாற்காலியையும் சிறை அதிகாரிகள் பறித்துக்கொண்டார்கள்.
“அவருக்கு தலையணைகூட இல்லை. படுக்கையிலேயே உட்காரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு முதுகு வலி வந்துவிட்டது,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இது ஒரு சிறிய பிரச்சினை. பரபரப்பாக்கவேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.