கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றம் சாட்டப்படும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைக் காண காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் திகார் சிறைக்கு நேரில் சென்றிருந்தனர்.
இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட திரு சிதம்பரம், செப்டம்பர் ஐந்தாம் தேதி டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது சிறைக்காவலை அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்க இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்தின் மூலம், தனது மகன் கார்த்தியின் வற்புறுத்தலின் பேரில், வெளிநாடுகளிலிருந்து வரும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியதாகத் திரு சிதம்பரத்தின்மீது குற்றம் சாட்டப்படுகிறது.
“தைரியத்துடன் இருப்பேன்”
திரு சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சி எளிதில் விட்டுக்கொடுக்காது என்பது அவரைச் சிறையில் காண திருமதி சோனியா காந்தியும் திரு மன்மோகன் சிங்கும் சென்றதிலிருந்து புலப்படுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் ஓர் அரசியல் சதி என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டிருப்பதும் இதன் மூலம் தெரிவதாகக் கூறப்படுகிறது.
தன்னைக் காண அவ்விரு தலைவர்களும் வந்தது குறித்து பெருமையடைவதாகத் திரு சிதம்பரம், குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் டுவிட்டரில் தெரிவித்தார். கட்சி வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கும்வரை தானும் அவ்வாறு இருக்கப்போவதாக அவர் கூறினார்.