ஐநூறுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவக் காத்திருப்பதாக இந்திய ராணுவப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறினார்.
ஏற்கெனவே சுமார் 60 பயங்கரவாதிகள் ஜம்மு, காஷ்மீருக்குள் அத்துமீறி ஊடுருவி இருப்பதாக வேவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகமான பயங்கரவாதிகள் ஊடுருவலாம் எனத் தகவல் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஊடுருவக் காத்திருக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிகமானது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். எதிர்வரும் விழாக்காலத்தை முன்னிட்டு விழிப்புநிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாலகோட் பயங்கரவாத முகாமை பாகிஸ்தான் அண்மையில் மீண்டும் செயல்படுவதாக ஜெனரல் ராவத் கூறியதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்பு செய்ததைப்போல மறுபடியும் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு, "நாங்கள் ஒன்றைச் செய்தோம், அதையே ஏன் மறுபடியும் செய்யவேண்டும்...நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று அந்தத் தரப்பு யோசித்துக்கொண்டே இருக்கட்டும்," என்று அவர் பதிலளித்தார்.

