துபாய் விமான நிலையத்தில் பணிபுரிந்த இந்திய ஊழியர் இரண்டு மாம்பழங்களைத் திருடியதற்காக அபராதம் செலுத்தி, வேலையிழந்து, தாயகம் திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பயணிகளின் பொருட்களைக் கையாளும் பிரிவில் 27 வயது இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார். அவர் பயணியின் பை ஒன்றைத் திறந்து எதையோ திருடியதை கண்காணிப்பு காணொளியில் பார்த்ததாக பாதுகாவல் அதிகாரி தெரிவித்ததன் பேரில் போலிசில் புகார் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவரது தங்குமிடத்திலும் சோதனை செய்யப்பட்டது.
தனக்கு மிகவும் தாகமாக இருந்ததால் மாம்பழப் பெட்டியிலிருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்துத் தின்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார்.
அதனையடுத்து, 5,000 திர்ஹாம் ($1,874) அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அத்துடன் அவர் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளார்.