மும்பை: கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மும்பை மாநகரம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடல் நீர் மட்டமானது குறைந்தபட்சம் 20 சென்டி மீட்டர் அளவு உயர்ந்தாலே மும்பை மாநகரம் தற்போது எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கு இரு மடங்காக அதிகரித்துவிடும் என்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மும்பை உள்ளிட்ட பூமியின் வெப்ப மண்டல பகுதிகளில் கடல் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. எதிர்வரும் 2100ஆம் ஆண்டுக்குள் உலகளவில் கடல் நீர் மட்டம் சுமார் ஒரு மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றோர் ஆய்வின் முடிவு கடல் நீர் மட்ட உயர்வால் மும்பை மாநகரின் கால் பகுதியேனும் கடல் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
இதையடுத்து மும்பையின் கடலோரப் பகுதிகளிலும், அங்குள்ள ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான தாராவியிலும் குடியிருப்போர் தங்கள் வீடுகளுக்கு என்னவாகும் என கவலையும் அச்சமும் கொண்டுள்ளனர்.
கடல் நீர் மட்டம் அதிகரிப்பதைத் தடுக்கவும், மும்பை கடற்கரையில் உள்ள மண் பகுதி அரிக்கப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என நிபுணர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அண்மைய ஆண்டுகளில் கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக மும்பை பலமுறை தத்தளித்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு வீசிய புயலில் ஐநூறு பேர் பலியாகினர். பல பில்லியன் டாலர் மதிப்பிலான சேதங்களும் மும்பையை நிலைகுலைய வைத்தன. இதனால் தங்களுடைய வீடுகள், வசிப்பிடங்கள் என்னாகுமோ என மக்கள் கவலையில் உள்ளனர்.
எனவே மும்பை எதிர்நோக்கி உள்ள ஆபத்தில் இருந்து அந்நகரையும் மக்களையும் காப்பதற்கு மேலும் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.