பெங்களூரு: போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதில் பொதுமக்களும், பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனமோட்டிகளுக்கு இனி பெட்ரோல் வழங்கக் கூடாது என பெட்ரோல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை வரும் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத காரணத்தால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.
விதிமீறல்களுக்காக விதிக்கப் படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், மத்திய அரசு அசைந்து கொடுக்க வில்லை.
இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகி பகுதியில் இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் தரக்கூடாது என்ற புதிய விதியை காவல்துறை அமல்படுத்த உள்ளது.
வரும் 29ஆம் தேதி இந்தப் புதிய விதி அமலுக்கு வரும் என்றும், அதுவரை தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும் என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகனமோட்டிகள் தங்களுடைய மற்றும் பொதுநலன் கருதி போக்கு வரத்து விதிகளைப் பின்பற்ற வேண் டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.