திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகத் தாம் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி நியூயார்க்கின் கேட்ஸ் அறநிறுவனம் வழங்கிய 'குளோபல் கோல்கீப்பர்' விருதை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மனித உரிமை ஆதரவாளர்களின் குறைகூறல்களைப் பொருட்படுத்தாமல், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டார்.
இந்தியப் பிரதமரைக் கௌரவிக்கும் தீர்மானத்திற்கு, நோபல் பரிசு பெற்ற மூவர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரு மோடியின் அரசாங்கத்தின்கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர். அதே சமயத்தில், விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த பிரிட்டிஷ்-ஆசிய நடிகர்கள் ஜமீலா ஜமில், ரிஸ் அகமத் ஆகியோர் கடைசி நேரத்தில் வரவில்லை.
குறைகாண்பவர்களின் கருத்துகளைத் தாம் மதித்த போதிலும், தாங்கள் எடுத்த தீர்மானம் சரியானதே என்று பில், மெலிண்டா கேட்ஸ் அறநிறுவனம் தெரிவித்தது. தனிநபர் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்துக்கான தீர்வு இது. இந்தியாவின் திட்டம் மற்ற உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகப் பயன்படக்கூடும் என்றும் அறநிறுவனம் கூறியது.
கொடைவள்ளலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்சிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்ட திரு மோடி, "தூய இந்தியா இயக்கத்தை மக்களின் இயக்கமாக உருமாற்றி, தூய்மைக்குத் தங்கள் வாழ்க்கையில் ஆக உயரிய முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கிய இந்தியர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்," என்று கூறினார்.
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 20 பில்லியன் டாலர் திட்டத்தின்கீழ் 100 மில்லியனுக்கு மேலான கழிவறைகளைக் கட்டியிருப்பதாக இந்திய அரசாங்கம் குறிப்பிடுகிறது. திறந்த வெளிகளில், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில், மலம் கழிக்கும் பழக்கம் நாட்டில் முக்கிய பொதுச் சுகாதாரப் பிரச்சனையாகத் தலையெடுத்திருந்தது. அதற்குத் தீர்வு காணவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
விருதளிப்பு நிகழ்ச்சிக்கு முன்பாக, நோபல் பரிசு பெற்றுள்ள மய்ரீட் மெக்வாயர், டவக்கொல் அப்தில்-சலாம் கர்மன், ஷிரின் இபாடி ஆகியோர், திரு மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் "இந்தியா ஆபத்தான, கொடிய குழப்பநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் மனித உரிமைகளும் ஜனநாயகமும் தொடர்ந்து கீழறுக்கப்படுகின்றன," என்று குற்றம் சாட்டினார்கள்.
விருதை எதிர்த்த இணைய மனுவில் 100,000 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆனால், இந்தக் குறைகூறல்களுக்குத் திரு மோடி பதிலளிக்கவில்லை.
"தூய இந்தியா இயக்கத்திற்கு முன், இந்தியாவில் 500 மில்லியனுக்கு மேலானோருக்குப் பாதுகாப்பான கழிவறை வசதிகள் இல்லை, ஆனால் இப்போது பெரும்பாலோருக்கு இந்த வசதி இருக்கிறது," என்று கேட்ஸ் அறநிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.

