இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமியை, அவரின் தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, கடந்த இரு ஆண்டுகளாக 30 பேர் அவரைச் சீரழித்து வந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட பாட்டி, கணவன்-மனைவி, மகள் என நால்வர் கொண்ட அந்தக் குடும்பம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு ஈரறை வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தது.
அந்தச் சிறுமியின் தந்தைக்கு வேலை எதுவும் இல்லாததால் வீட்டு வாடகைகூட கட்ட முடியாத அளவிற்கு நிதிப் பிரச்சினை. அதைச் சமாளிப்பதற்காக, ஒரு கட்டத்தில் தன் மனைவியைப் பாலியல் தொழிலில் ஈடுபடும்படி அந்த ஆடவர் கட்டாயப்படுத்தியதாகவும் ஆனால் அதற்கு அவரின் மனைவி உடன்பட மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து, அப்போது பத்து வயதான தன்னுடைய மகளை அந்த ஆடவர் பாலியல் தொழிலில் தள்ளியதையடுத்து, முதன்முதலில் தந்தையின் நண்பர்தான் அச்சிறுமியைச் சீரழித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் பலரும் வந்து போயுள்ளனர்.
இதில் அதிர்ச்சி என்னவெனில், இது எதுவுமே அச்சிறுமியின் தாய்க்குத் தெரியாமல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தாயிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று அச்சிறுமியை அவரின் தந்தை மிரட்டியுள்ளான்.
அண்மையில் பள்ளியில் நடந்த ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலோசகர் ஒருவரிடம் தான் அனுபவித்து வரும் கொடுமைகளை அச்சிறுமி பகிர்ந்துள்ளார்.
தான் துன்புறுத்தப்பட்டு வந்ததைக்கூட அந்தச் சிறுமி உணர்ந்திருக்கவில்லை என்றும் அப்போதுகூட தன்னால் வீட்டுச் செலவைச் சமாளிக்கப் பணம் தர முடியாமல் போகுமே என்று கவலைப்பட்டதாகவும் அந்த ஆலோசகர் வேதனையுடன் தெரிவித்தார்.
வீட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளியில்தான் அப்பெண் படித்து வந்துள்ளார். பள்ளிக்குச் செல்லும்போதும் வீடு திரும்புகையிலும் தன் அம்மாவுடனேயே அச்சிறுமி சென்று வந்துள்ளார்.
பள்ளியிலும் அச்சிறுமிக்குத் தோழிகள் யாரும் இல்லை. எவருடனும் அச்சிறுமி பேசமாட்டாராம்.
இதற்கிடையே, இரவு நேரங்களில் அச்சிறுமி சத்தமிட்டு அழும் சத்தம் கேட்கும் என்றும் ஆண்கள் பலரும் அங்கு வந்து செல்வதைப் பார்த்துள்ளேன் என்றும் 47 வயதான அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் கூறினார்.
அவர்களின் குடும்ப விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் தங்களுடைய மகள்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெண்ணியும் அக்கம்பக்கத்தினர் ஒதுங்கியே இருந்துள்ளனர்.
அவர்களுள் ஒருவர், அச்சிறுமி படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவளின் வீட்டில் மர்மமாக ஏதோ நடக்கிறது என்று சொன்ன பிறகே, அவளை ஆலோசகர் சந்தித்து விசாரித்துள்ளார்.
இச்சம்பவத்தின் தொடர்பில் அச்சிறுமியின் தந்தை உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டனர் என்றும் மற்றவர்களைத் தேடி வருகிறோம் என்றும் மலப்புரம் போலிஸ் துணை கண்காணிப்பாளர் பி பி ஷம்சு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக, “மன்னித்துவிடுங்கள் அம்மா,” என்று அவசர அவசரமாக தனது வீட்டின் மரக்கதவில் அச்சிறுமி கிறுக்கிச் சென்றது காண்போரைக் கலங்க வைப்பதாக இருந்தது.
இதனிடையே, தம் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என அச்சிறுமியின் தாயார் மறுத்துள்ளார். “ஏதோ சதி நடக்கிறது. என் மகள் எனக்குத் திரும்ப வேண்டும்,” என்றார் அவர்.