நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததன் பேரில் வெங்கடேசன் என்ற மருத்துவரும் அவரது மகன் உதித்சூர்யாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்டேபார் 10ஆம் தேதி வரை அவர்கள் இருவரும் சிறைக்காவலில் இருப்பர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் தொடர்பில், தேனி மருத்துவக் கல்லூரியின் வேந்தர் ராஜேந்திரன் இன்று சிபிசிஐடியிடம் முன்னிலையாகியுள்ளார். அவர் இந்தச் சம்பவம் குறித்து காலதாமதமாகப் புகார் அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக அக்கல்லூரியின் அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து போலிசார், உதித்சூர்யா மீது இம்மாதம் 18ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
போலிசாரிடமிருந்து தப்பியோட முயன்ற உதித்சூர்யாவும் அவரது தாய் தந்தையரும் ஹைதரபாத்தில் பதுங்கியிருந்தனர். ஆனால், போலிசார் அவர்களைப் பின்தொடர்ந்து இறுதியில் அவர்களைத் திருப்பதியில் கைது செய்தனர். முன்பிணைக்கான அவர்களது விண்ணப்பத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

