பிராணவாயு பற்றாக்குறையால் உத்தரப் பிரதேச மருத்துவமனையில் 60க்கும் அதிகமான குழந்தைகள் மாண்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மருத்துவர் இப்போது தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் கஃபீல் அகமது கான், பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறார் நல மருத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கும் 11ஆம் தேதிக்கும் இடையே 63 சிறார்கள் மடிந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் கொந்தளித்ததை அடுத்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த ஊரிலுள்ள அந்த மருத்துவமனையைக் காணச் சென்றிருந்தார். கஃபீல் கான் பணிநீக்கம் செய்யப்பட்டார். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அவர் கைதாகி பின்னர் சிறையில் இடப்பட்டார்.
இது குறித்து வெளிவந்த அரசாங்க விசாரணை அறிக்கையில், கஃபீல் கான் கவனக்குறைவாக நடந்துகொண்டதற்கான எந்த நேரடி ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பிராணவாயு விநியோக முறைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றது அந்த அறிக்கை.
அதிருப்தியில் இருக்கும் கஃபீல் கான், தன்னிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.