லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 25 பேர் பலியாகிவிட்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களான ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உள்பட பல இடங்களில் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து நேற்றுக் காலை அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன," என தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் வெள்ளநீரை வெளியேற்றவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதிகபட்சமாக ரேபரலி பகுதியில் 89.6 மி.மீ. மழை பாதிவானது. அதற்கு அடுத்தபடியாக தலைநகர் லக்னோவில் 45.4 மி.மீ. மழை பதிவானது. மேலும் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

