அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் 2002ஆம் ஆண்டு ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த இனக்கலவரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்தச் சமயத்தில், அகமதாபாத்தை ஒட்டியுள்ள ரந்திக்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்ற ஐந்து மாத கர்ப்பிணி பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19தான்.
அதோடு நில்லாது, அவருடைய குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் எழுவரையும் அக்கும்பல் கொலை செய்தது. இது தொடர்பான வழக்கில் மருத்துவர்கள் இருவர், போலிசார் ஐவர் உட்பட 18 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனிடையே, மாநில அரசின் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீட்டை வாங்க மறுத்து உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார் பில்கிஸ் பானு. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்தது. அதன்படி, இன்னும் இரு வார காலத்திற்குள் பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும் வீடும் தரப்படவேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

