அமராவதி: தனக்கு எதிரான முறைகேடு வழக்கில் முக்கிய சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக விஜயவாடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
முறைகேடு வழக்கு விசாரணையின் போது நேரில் முன்னிலையாவதில் இருந்து ஜெகன் மோகனுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஐ வலியுறுத்தி உள்ளது.
2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஜெகன் மோகனின் தந்தை ராஜ சேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போது, அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முதலீடுகளை பெற்றதாக ஜெகன் மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தரப்பு புகார் எழுப்பியுள்ளது.
மேலும் அவர் தமக்கு எதிரான சாட்சிகளை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து தற்போது முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் மீண்டும் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ள சிபிஐ, மாநில முதல்வராக இருக்கும் ஒருவருக்கு வாரத்திற்கு ஒருமுறை 275 கிலோ மீட்டர் தூரம் பயணித்து விஜயவாடா நீதிமன்றத்தில் முன்னிலையாவது ஒன்றும் இயலாத காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளது.

