புகழ்பெற்ற கர்நாடக சாக்சொபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் அக்டோபர் 11ஆம் தேதி காலமானார். உடல்நலக்குறைவால் மங்களூர் மருத்துவமனையில் உயிர் நீத்த அவருக்கு 69 வயது.
திரு கோபால்நாத் கர்நாடகாவின் சஜ்ஜிபமூடா கிராமத்தில் 1950ஆம் ஆண்டில் இசைக்கலைஞர் குடும்பத்தில் பிறந்தார். நாதஸ்வரக் கலைஞரான அவரது தந்தை தனியப்பாவிடமிருந்து ஆரம்பத்தில் இசை பயின்ற திரு கோபால்நாத், என். கோபால கிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சொபோனில் கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார்.
மேற்கத்திய பாணியிலும் இந்த இசைக்கருவியில் கைதேர்ந்த திரு கோபால்நாத், பல்வேறு ஜாஸ் இசை விழாக்களில் கலந்துகொண்டார்.
டுவெட் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப்பிரபலமான பாடல்களில் இடம்பெற்ற சாக்சொபோன் வாசிப்பு இவரது கைவண்ணமே. ஏ.ஆர். ரகுமானின் இசையமைப்பில் இவரது இசைத்திறன் செவ்விசை ரசிகர்களின் வட்டத்தைக் கடந்து திரையிசை ரசிகர்களையும் சென்று சேர்ந்தது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம், அகோபில மடம் உள்ளிட்ட பழம்பெரும் சமய அமைப்புகள் அவருக்கு ஆஸ்தான வித்வான் பட்டம் கொடுத்து கௌரவித்தன.
பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருந்த திரு கோபால்நாத் தமது மனைவியையும் இரு மகன்களையும் விட்டுப் பிரிகிறார்.