புதுடெல்லி: இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை கடந்த 2017ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியது.
இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த வரைவுத் திட்டம் தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அடுத்த மாதம் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், “வரைவுத் திட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நவம்பர் மாதத்தின் மத்தியில் அமலுக்கு வரும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.