ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஆனால், அமலாக்கத்துறை அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருவதால் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் சிபிஐ நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் தள்ளுபடி செய்யப்பட்டன.
பிணை கோரி ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை மற்றும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கி இன்று உத்தரவிடப்பட்டது.
அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு 24ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் முன்னிலைப்படுத்தப்படுவார். அப்போது உச்ச நீதிமன்றம் அளித்த பிணை உத்தரவின் அடிப்படையில், ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளியில் செல்வது குறித்து சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.