மலேசியாவிலிருந்து வரும் செம்பனை எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகாரபூர்வமாகத் தடை செய்யவில்லை. ஆயினும், தாங்கள் மலேசியாவின் செம்பனை எண்ணெய்யை வாங்கப்போவதில்லை என்று இந்திய வர்த்தகர்கள் பலர் முடிவு செய்திருப்பதால் இந்தியாவைச் சமாதானப்படுத்த மலேசியா முயற்சி எடுத்து வருகிறது.
அசர்பைஜானில் இவ்வாரம் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் சந்திப்புக்கு இடையே மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லாவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் சந்தித்து சற்று நேரம் கலந்துரையாடினர். ஒரு சில விவகாரங்கள் குறித்து மலேசிய அமைச்சருடன் வெளிப்படையான முறையில் உரையாடியதாக திரு எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
செம்பனை எண்ணெய் இறக்குமதியின் தொடர்பில் இந்தியா எந்த அதிகாரபூர்வ தடை உத்தரவைப் பிறப்பிக்காவிட்டாலும் வர்த்தகர்களின் இந்தப் புறக்கணிப்பு இந்தியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அவர் கூறினார். காஷ்மீர் விவகாரம் குறித்த மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் கருத்துகள் இந்தியாவில் இந்தப் புறக்கணிப்புக்கு வித்திட்டுள்ளது. இருந்தபோதும், தமது கருத்துகளிலிருந்து பின்வாங்கப் போவதாக இல்லை என்று டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.