பாட்னா: பீகார் மாநிலத்தில் சூரிய பகவானை வணங்கிக் கொண்டாடப்படும் 'சத்' பூஜை நான்கு நாள் விழாவின்போது நிகழ்ந்த பல துயரச் சம்பவங்களில் 18 குழந்தைகள் உட்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.
சமஸ்திபூர் மாவட்டம், பாட்கான் கிராமத்திலுள்ள ஒரு காளி கோயில் சுவரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சமஸ்திபூர், பெகுசராய் பாகல்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு குளங்களில் மூழ்கி எட்டு பேர் மாண்டுவிட்டனர். வைஷாலி, புர்னியா, ககாரியா ஆகிய மாவட்டங்களில் 10 சிறார்கள் உட்பட 18 பேர் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஒளரங்காபாத் மாவட்டம், தேவ் பகுதியில் சனிக்கிழமை மாலை சத் பூஜையின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தன. பீகாரின் மிக முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் 'சத்' பூஜை, அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கியது.
பீகார் முழுவதும் நான்கு நாட்களாக நடந்த 'சத்' பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று காலை கங்கை நதி மற்றும் பிற நீர்நிலைகளில் சூரிய பகவானை வணங்கி பூஜை செய்தனர். இதனிடையே, விழா காலத்தின்போது நிகழ்ந்த துயரச் சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.

