புதுடெல்லி: உத்தரப்பிரேதசத்தில் அயோத்தி ராமர் கோயில்-பாபர் மசூதி மீதான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாக உள்ளது. தீர்ப்பு எந்தத் தரப்பிற்குச் சாதகமாக இருந்தாலும் தீர்ப்பிற்குப் பின் வன்முறை, கலவரம் நிகழாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக உள்ளன. இதனையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாநிலத்தின் புனித நகரங்களில் மத்திய உளவுத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயலும் சமூக விரோதச் சக்திகளை ஒடுக்குவதற்குப் போலிஸ் தயார் நிலையில் இருக்கிறது என்றும் அவசியம் என்றால் உத்தரப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்றும் மாநிலத்தின் போலிஸ் தலைவர் ஓபி சிங் தெரிவித்தார். எந்தச் சூழலிலும் யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள அனு மதிக்க மாட்டோம் என்றாரவர்.