வாரணாசியில் காற்று மாசிலிருந்து பாதுகாக்க வேண்டி சிவலிங்கத்திற்கு பூசாரிகள் முகக்கவசம் அணிவித்து வழிபட்டனர்.
டெல்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக் காலமாக காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது. காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் முகக்கவசம் அணிந்துதான் வெளியில் சென்று வருகின்றனர்.
அங்கு காற்று தூய்மைக்கேடு உருவாக்கியுள்ள சீர்கேட்டின் தீவிரத்தை எடுத்துரைக்கும் சம்பவம் வாரணாசியில் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பூசாரிகள் முகக்கவசம் அணிவித்து வழிபட்டனர்.
காற்றுத்தூய்மைக்கேட்டிலிருந்து சிவன் பாதுகாக்கப்பட்டால், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்ட அந்தப் பூசாரிகளும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
இதேபோல் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி சிலைகளுக்கும் முகக்கவசங்கள் அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது.