புதுடெல்லி: இந்தியப் பொருளியல் வளர்ச்சி மந்தமாக இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் கடன் மதிப்பீட்டுத் தரநிலையைக் குறைத்துள்ளது ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ அனைத்துலகத் தர மதிப்பீட்டு நிறுவனம்.
இந்தியப் பொருளியல் வளர்ச்சியானது ‘நிலையான’ எனும் நிலையில் இருந்து ‘எதிர்மறையான’ நிலையை நோக்கிச் செல்வதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அதிகரித்து வரும் கடன் சுமையையும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருவதையும் ‘மூடிஸ்’ நிறுவனம் தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.
இதன் காரணமாக, முதலீட்டிற்கான தரநிலையில் இரண்டாவது மோசமான தரநிலைப் புள்ளியான ‘பிஏஏ2’ இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடன் மதிப்பீட்டு நிலை குறைக்கப்பட்டதால் இந்தியாவில் முதலீடு செய்வது குறையலாம் என அஞ்சப்படுகிறது. முதலீடு குறைந்தால் தொழில் துறை முடங்கக்கூடும். இது பொருளியல் வளர்ச்சிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, வேலையின்மை பிரச்சினையை அதிகரித்துவிடும்.
அண்மையில் உலக வங்கி வெளியிட்ட தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா பெரும் ஏற்றம் கண்டிருந்தது. இந்த நிலையில், மூடீஸ் நிறுவனத்தின் அறிக்கை இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்திய நிதித்துறை சில அபாயங்களைச் சந்திக்கும் என ‘எஸ் அண்ட் பி அனைத்துலக மதிப்பீடுகள்’ நிறுவனம் எச்சரித்த சில நாட்களிலேயே மூடிஸ் நிறுவனம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மூடீஸ் நிறுவனத்தின் அறிக்கைக்கு மத்திய நிதியமைச்சுத் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மூடீஸ் நிறுவனம் இந்தியாவின் மதிப்பீட்டைக் குறைத்திருந்தாலும் உலகின் மிக வேகமாக வளரும் பொருளியலாக இந்தியா திகழ்கிறது என்றும் வளர்ச்சிக்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.