லக்னோ: காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் கடந்த ஓராண்டாக பொதுக் கழிப்பறையைக் கோவில் எனக் கருதி, மக்கள் பூசை செய்து வழிபட்ட சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஓராண்டுக்குமுன் திறந்துவைக்கப்பட்டபோதும் அந்தக் கழிப்பறை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பும் அதற்கு அடிக்கப்பட்டிருந்த காவி நிறமும் அதனைக் கோவில் எனத் தாங்கள் நினைக்கும்படி செய்துவிட்டதாகக் கூறினர் ஹமீர்பூர் மாவட்டம், மௌதகா பகுதியைச் சேர்ந்த மக்கள்.
அந்தக் கழிப்பறைக்கு அருகில் கடை வைத்துள்ள ஹனி சிங் கூறுகையில், “காவி நிறத்தால் மக்கள் தவறுதலாக நினைத்து, அந்தக் கழிப்பறையின் முன்னால் விழுந்து வணங்கிவிட்டுச் செல்வர்,” என்றார்.
இப்போது காவி நிறம் மறைக்கப்பட்டு, இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுவிட்டதால் குழப்பம் தீர்ந்துவிட்டது என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, இந்தக் குழப்பத்திற்குக் கட்டுமான ஒப்பந்ததாரரே காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் அம்ரித்பூர் கிராமத்தில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட 350 கழிப்பறைகளில் நூறு கழிப்பறைகளுக்கு அவ்வூர்வாசிகள் காவி வண்ணம் பூசிய தகவல் வெளியாகியுள்ளது.