ஹொசாங்காபாத்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நயகான் எனும் கிராமத்தை நோக்கி நாளொன்றுக்கு 25,000 முதல் 30,000 பேர் வரை படையெடுத்து வருகின்றனர். காரணம், அங்குள்ள ஓர் இலுப்பை மரம்.
அந்த மரத்திற்கு மந்திர சக்தி இருப்பதாகவும் அதனருகே செல்வோருக்கு நோயெல்லாம் குணமாகிவிடுவதாகவும் ஒருவர் சொன்னதை அடுத்து, படுக்கையில் ‘குளுக்கோஸ்’ ஏற்றியவாறும் சக்கர நாற்காலியில் இருந்தவாறும் மக்கள் அந்த மரத்தை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் அம்மரத்திற்குச் சென்ற ஒருவர் சில மணி நேரத்தில் உயிர் இழந்த சம்பவமும் நிகழ்ந்ததுண்டு.
அந்த மரத்திற்கு எந்த மந்திர சக்தியும் இல்லை என வனத்துறை அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியும் பலனில்லை. கடந்த இரு மாதங்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் (ஒரு மில்லியன்) மேற்பட்டோர் அந்த மரத்தைத் தேடிச் சென்றனர்.
கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதை அடுத்து, அங்கு ஒரு சந்தையே உருவாகிவிட்டதாம். அங்கிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பச்மரி என்ற மலைவாழிடத்தைக் காட்டிலும் நயகானுக்கு அதிக கூட்டம் வருகிறதாம். இதனிடையே, வதந்தியைக் கிளப்பிய ரூப் சிங் என்ற விவசாயி மாயமாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.