மும்பை: மகாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழலில் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க சிவசேனா தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை மும்பையின் மலாடு பகுதியில் உள்ள ஓர் ஓட்டலில் தங்கவைத்து உள்ளது.
இந்த நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (படம்) விடுதியில் எம்எல்ஏக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம். மகாராஷ்டிராவில் சிவசேனா நிச்சயமாக ஆட்சி அமைக்கும்,” என கூறினார். அப்போது ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இது குறித்து ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏ ஒருவா் கூறுகையில், ‘‘பாஜக நமக்கு முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினால் அவர்களிடமும் பேசலாம்.
இப்போது உள்ள நிலையில் நம்மை யார் முதலில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில்தான் உள்ளது. ஒருவேளை இருதரப்பினரும் (பாஜக, தேசியவாத காங்கிரஸ்) முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறினால், நமது முதல் தேர்வு பாஜகதான் என உத்தவ் தாக்கரே எங்களிடம் கூறினார்,’’ என்றார்.