மும்பை: முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்துவிட்டு, தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.
மும்பை காட்கோபர் பகுதியில் ‘ரசிக்லால் ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையில் நடத்தப்பட்ட தங்கநகை சேமிப்புத் திட்டத்தில் ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் ரசிக்லால் ஜூவல்லர்ஸ் திடீரென இழுத்து மூடப்பட்டது. இதனால் அந்தக் கடையில் மூதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடை உரிமையாளர்களான ஜேயேஷ் ரசிக்லால் (வயது55), நிலேஷ் ரசிக்லால் (53) ஆகியோரை முதலீட்டாளர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் அவர்கள் இருவரும் தலைமறைவானது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் முதலீட்டாளர்கள், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் பணத்தையும் நகையையும் முதலீடு செய்து இருந்ததும், அந்தப் பணத்துடன் நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் தலைமறைவானதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து நகைக்கடை உரிமையாளர்களைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 42 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.