புதுடெல்லி: ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடக்கவில்லை என்று மத்திய அரசுக்கு நற்சான்று அளித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுத்துவிட்டது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58,000 கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும் என்ற பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், வினித் தண்டா உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தை விசாரிப்பதற்கும் நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதலால், ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை,” எனக் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், வினித் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டு கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குழு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுப்புத் தெரிவித்தது. போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்ததாகக் கூறி காங்கிரசும் மனுதாரர்களும் கோரிய நிலையில், அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தவறு ஏதும் நடக்கவில்லை என்பதை நீதிபதிகள் உறுதி செய்தனர்.