இந்தியர்கள் ரொக்கத்தை அதிகம் நம்பியிருப்பதால் மின்னிலக்கக் கட்டண முறைக்கு மாறுவதில் அந்நாடு பின்தங்கிய நிலையில் உள்ளது. சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் மக்கள் பெருமளவில் இணையம், கைபேசிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தபோதும் அவர்களில் பலர் மின்னிலக்கக் கட்டண முறையைப் பயன்படுத்துவதில்லை.
கிராமப்புற மக்களுக்கு ரொக்கமே இன்னமும் எல்லாமாக உள்ளது. போதிய வசதிகளுக்கான பற்றாக்குறையால் இவ்வாறு நடந்துள்ளது. சட்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுதிர் ஷின்டே, தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை வெளியே எடுப்பதாகத் தெரிவித்தார். பல நேரங்களில் அந்த வங்கி இயந்திரம் செயலிழப்பது இதற்கு முக்கிய காரணம் என்றார் கரும்பு விவசாயம் செய்யும் ஷின்டே. குடும்பத்தைப் பாதிக்கும் அவசர சூழல்நிலைகளுக்காகக் கையில் ரொக்கம் வைத்திருப்பது மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புழக்கத்தில் இருந்த 86 விழுக்காடு நோட்டுகளைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார். 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்யும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் மின்னிலக்கப் பொருளியல் உந்துதல் பெறும் என்றும் ரொக்கப்புழக்கம் குறையும் என்றும் திரு மோடி தெரிவித்தார். ஆயினும், மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாணயத்தில் 99.3 விழுக்காடு மீண்டும் வங்கிக் கட்டமைப்பில் பயன்படுத்தப்படுகின்றன. மதிப்பிழப்புக்குள்ளான 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் மிகச் சிறிய அளவு மட்டும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத கள்ள அல்லது போலி நோட்டுகள்.
ரொக்கப் புழக்கத்தைக் குறைப்பதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தபோதும் இதற்கு நேர்மாறாக ரொக்கப்புழக்கம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 2019ஆம் தேதியின் நிலவரப்படி ரொக்கப் புழக்கத்தின் மதிப்பு 17 விழுக்காடு அதிகரித்து 21.1 டிரில்லியன் ரூபாய் ஆக உள்ளது. இதற்காக மின்னிலக்க பரிவர்த்தனைகள் அதிகரிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. 2018 ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையே மின்னிலக்க நாணய பரிவர்த்தனை 19.5 விழுக்காடு கூடியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செயல்திறன் மிக்க, வசதியான, பாதுகாப்புள்ள மற்றும் கட்டுப்படியான கட்டண முறைகளை நிறுவ ரிசர்வ் வங்கி நிறுவியுள்ளது. இதனால் சில்லறை விற்பனைத் துறையில் மின்னிலக்கக் கட்டண முறை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கார் நிறுத்துமிடம், எரிபொருள், சாலை வரி ஆகியவற்றுக்கான கட்டணங்களுக்கு மின்னியல் முறையைப் பிரபலப்படுத்த முற்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அத்துடன் மின்னிலக்க பணமாற்றங்களுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய வங்கி, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.