300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை ரிதேஷ் ஜன்ஷேஷ் சோலங்கி எனும் அந்தச் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 50வது அடியில் சிக்கியிருந்தான். அது பற்றிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சிறுவனைப் பத்திரமாக மீட்டனர்.
தற்போது சிறுவன் ரிதேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிதேஷின் பெற்றோர் மகாராஷ்டிராவில் கூலி வேலைக்காகச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தின் இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு 82 மணி நேரம் போராடியும் காப்பாற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.