கேரளாவில் உள்ள சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்குத் தடையில்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை வேறு ஓர் அமர்வுக்கு மாற்றியுள்ள நிலையில் கார்த்திகை மாதத் திருவிழாவை முன்னிட்டு நாளை கோயிலின் நடை திறக்கப்பட உள்ளது.
கோயிலுக்குச் செல்வதற்கு 300க்கும் மேற்பட்ட பெண்கள் இணையம் வழியாக பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் செல்வதை ஆலய நிர்வாகம் ஊக்குவிக்கவில்லை.
அதன் தொடர்பில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் சட்ட நுணுக்கங்களைத் தெரிவித்துள்ளனர்.
“அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.
“சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்.
“நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்,” என்று இன்று செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.
பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை வருவதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, சபரிமலை கோவில் வளாகம் ஆர்வலர்களுக்கான இடம் அல்ல என்றார் மந்திரி சுரேந்திரன்.
கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity