ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதிய உணவு வாங்குவதற்காக மாணவர்கள் வரிசையில் நின்றனர்.
அப்போது, புருசோத்தம் ரெட்டி என்ற சிறுவன் அருகிலிருந்த சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்தான். இதையடுத்து பள்ளி ஊழியர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இடத்தில் இருந்த பணியாளர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை புருஷோத்தம் இறந்துள்ளதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் ரெட்டி மற்றும் முதல்வர் நாகமல்லேஸ்வர ரெட்டி ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.
மேலும் அந்தப் பள்ளியில் உள்ள விடுதி விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டு வந்தது கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity