பெங்களூரு: குட்டையில் குளித்தபோது நீரில் மூழ்கிய நண்பனைக் காப்பாற்றாமல் அவன் உயிரிழப்பதைக் காணொளியாக சக நண்பர்கள் பதிவு செய்தது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கலாபுர்கி மாவட்டத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் இளையர்கள் சிலர் குளிக்கச் சென்றனர். உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது ஜாபர் என்ற இளையர் திடீரென நீந்த இயலாமல் நீரில் தத்தளித்தார்.
தனக்கு உதவுமாறு அவர் குரல் எழுப்பியபோது நண்பர்கள் அவரைப் பார்த்துச் சிரித்துள்ளனர். உடன் வந்த நண்பர்கள் கரை திரும்பிய நிலையில் ஜாபர் நீரில் மூழ்கத் தொடங்கினார். தன் கையை வேகமாக அசைத்துத் தன்னைக் காப்பாற்றும்படி நண்பர்களை நோக்கி அவர் கதறியபோதும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. மாறாக, ஜாபர் நீரில் மூழ்குவதை நண்பர்கள் கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
தாங்களும் நீரில் மூழ்குவோம் என்று பயந்து நண்பர்கள் அவருக்கு உதவி செய்யவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவில்லை. எனினும் நண்பர்கள் கைவிட்ட நிலையில் ஜாபர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜாபரின் நண்பர்கள் வைத்திருந்த கைபேசியில் பதிவாகியுள்ள காணொளி போலிசாரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.