ரேபரேலி: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் போர்வை மீது கொசுவர்த்திச் சுருள் விழுந்து தீப்பிடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்ப வம் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தன்று தம்பதியர் இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அதனால் இருவராலும் தப்பிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உயிரிழப்புக்கான காரணத்தை உறுதியாகக் கூற இயலும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பாப்பு என்ற ஆடவர், 45 வயதான தன் மனைவி ராஜ்னியுடன் கடந்த ஓராண்டாக ஒற்றை அறை மட்டுமே கொண்ட அந்தச் சிறு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர்களது ஒரே மகன் முகேஷ் பெற்றோரைப் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில் பாப்பு, ராஜ்னி தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என வீட்டின் உரிமையாளர் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
“சம்பவத்தன்று நள்ளிரவில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். தீயை சிறிது நேரத்தில் அணைத்து விட்டாலும் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை,” என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.