புதுடெல்லி: காற்று மாசு அதிகரித்ததை அடுத்து டெல்லியில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சமயம் உலகச் சுற்றுச்சூழலைக் காக்கவேண்டும் என அவர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
கடந்த இரு வாரங்களில் மட்டும் டெல்லியில் 2 முறை பள்ளிகள் மூடப்பட்டன. அங்கு காற்று மாசு உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள ஆரோக்கியமான காற்றின் தரத்தைக் காட்டிலும் 10 மடங்கு மோசமாக உள்ளது.
இதனால் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவருக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் காற்று மாசைக் கட்டுப்படுத்த வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகை பிடித்தால் உடல்நலத்துக்கு ஆபத்து என்பதைப்போல் டெல்லியில் காற்றைச் சுவாசித்தாலும் கூட ஆபத்து என்ற மோசமான நிலை ஏற்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்தாண்டு குழந்தைகள் தினத்தன்று கூட எந்தவித கொண்டாட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாமல் டெல்லி வாழ் குழந்தைகள் வீட்டிற்குள் முடங்க நேரிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டெல்லிக்கு அருகே உள்ள மாவட்டங்களில் விளைநிலங்களை எரிப்பதால் காற்று மாசின் அளவு அதிகரிக்கிறது என்றும் இத்தகைய சம்பவங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அறிவிப்புக்குப் பிறகும் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் அதிகரிக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே காற்றின் தரம் அதிகரிக்கும் வரை டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளை மறு அறிவிப்பு வரும் வரை மூட வேண்டும் என பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வியாழக் கிழமை, வெள்ளிக்கிழமையும் அங்கு பள்ளிகள் மூடப்பட்டன.
காற்று மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக டெல்லி மக்கள் கூறுகின்றனர்.