மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் தொடர்ந்து பேச இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஏதும் பேசவில்லை என்றார்.
“மராட்டியத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து சோனியாவிடம் விவரித்தேன். ஆனால், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பேசவில்லை. அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கி ரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்,” என்றார் சரத்பவார்.
இந்நிலையில் இரு கட்சி நிர்வாகிகளும் அடுத்த ஓரிரு தினங்களில் டெல்லியில் கூடி மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க இருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீன் சுர்ஜே வாலா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தம்மிடம் கூறியதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.