மும்பை: “நன்றி இல்லாதவர்கள் எங்களை முதுகில் குத்த முயற்சிக்கின்றனர்,” என்று பாரதிய ஜனதா கட்சியை சிவசேனா சாடியுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிபர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் சிவசேனா, தனக்கு முதல்-அமைச்சர் பதவி தர மறுத்த பாரதிய ஜனதாவை கடுமையாகச் சாடி வருகிறது.
இந்த நிலையில், பாஜகவை அந்தக் கட்சி முஸ்லிம் படையெடுப்பாளர் முகமது கோரியுடன் ஒப்பிட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
“இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடித்தளமிட்டவராகக் கூறப்படும் முகமது கோரி இந்து மன்னர் பிரிதிவிராஜ் சவுகான் மீது பலமுறை போர் தொடுத்தார். ஆனால் பிரிதிவிராஜ் சவுகான் போரில் வென்ற போதும், முகமது கோரியை எதுவும் செய்ய வில்லை. ஆனால் முகமது கோரி போரில் வெற்றி பெற்றபோது அவர் பிரிதிவிராஜ் சவுகானை கொன்றார். மராட்டியத்தில் கூடச் சிவசேனா இதுபோன்ற நன்றி மறந்தவர்களை பலமுறை காப்பாற்றியுள்ளது. இப்போது அவர்கள் எங்களை முதுகில் குத்த முயற்சிக்கின்றனர்,” என்று கூறியுள்ளது.