கைகள், கால்கள் கட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 145 இந்தியர்கள்

கைகள், கால்கள் கட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 145 இந்தியர்கள்

2 mins read
70a6f7ce-b8e2-4f22-89e6-60eea3e9a238
இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. படம்: ஊடகம் -

அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து விமானம் மூலம் 24 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு 145 இந்தியர்கள் சென்ற புதன்கிழமை (நவம்பர் 20) காலை எட்டு மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை அடைந்தனர்.

இந்த விமானப் பயணத்தின்போது பொதுவான குற்றவாளிகளைப்போல அவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அந்தப் பயணிகளில் சிலர், இதைப் பெருத்த அவமானமாக உணர்ந்தனர்.

நடுவில் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் சிறிது நேரம் நின்ற அந்த விமானத்திலிருந்து அந்நாட்டைச் சேர்ந்த 25 பேர் இறக்கிவிடப்பட்டனர்.

முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதையடுத்து, பல லட்சம் ரூபாய்களை முகவர்களிடம் கொடுத்து கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழையும் இத்தகையோர் அதிகாரிகளின் இலக்காகி வருகிறார்கள். அவர்களில் பலர் அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறி அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் பல்வேறு நாடுகள் வழியாக கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள்.

சிலர் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கி சில நாட்கள் பணி புரிந்தவர்கள். ஆனால், பலர் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்து சிறிது தூரத்திலேயே பிடிபட்டவர்கள்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவும் முகவர்களுக்கு 25 லட்ச ரூபாய் வரை இவர்கள் கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த முகவர்கள் அனைவரும் தலைமறைவாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

"என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவது சம்பாதித்த பணத்தை நான் அமெரிக்காவுக்குச் செல்வதற்கே பயன்படுத்திவிட்டேன். அங்கு பிடிபட்ட எனக்காக வாதாட வக்கீலை அமர்த்த என் தந்தை கடன் வாங்கவேண்டியதாயிற்று," என்று அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரவீந்தர் சிங் என்பவர் புதுடெல்லி விமான நிலையத்தில் குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு, 145 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இதேபோல 311 இந்தியர்கள் மெக்சிகோவின் டொலூகா சிட்டியிலிருந்து போயிங் 747 விமானத்தின் மூலம் 60 பாதுகாப்பு அதிகாரிகளுடன் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மெக்சிகோ-அமெரிக்க எல்லைக்கு அருகில் பிடிபட்டவர்கள் அவர்கள் என்று கூறப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity