மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகளும் சிவசேனா கட்சியுடன் நேற்று முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தவிருந்தன.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, என்சிபி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. முன்னதாக, டெல்லியில் உள்ள சரத் பவாா் இல்லத்தில் என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சி களின் தலைவா்கள் வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினா். அதனை அடுத்து சரத் பவாா் இல்லத்தில் என்சிபி மற்றும் சிவசேனா கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை நள்ளிரவு கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ரௌத் உள்ளிட்ட சிவசேனா தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் பேசிய ஒரு பிரமுகர், என்சிபி, காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே அனைத்து விஷயங்களிலும் உடன்பாடு எட்டப்பட்ட பிறகே மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு ஆட்சியமைப்பது குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கூறினாா். புதிய ஆட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு சிவசேனாவே முதல்வர் பதவியை வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இவ்வேளையில், பாஜகவை ஒதுக்கிவிட்டு இந்த மூன்று கட்சிகளும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், கடந்த 2017ல் அடிக்கல் நாட்டப்பட்ட பிரம்மாண்டமான புல்லட் ரயில் திட்டம் ரத்தாகக்கூடும் என்று தெரிகிறது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கும் மும்பைக்கும் இடையில் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்குவது என்பது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். ரூ. 1 லட்சம் கோடி செலவிலான அந்தத் திட்டத்திற்குத் தான் கொடுக்கவேண்டிய பங்கை மகாராஷ்டிராவின் புதிய அரசாங்கம் கொடுக்காது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்நிலை வட்டாரம் ஒன்று கூறியதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் திட்டத்திற்கு 0.1 விழுக்காடு என்ற குறைந்தபட்ச வட்டியில் ரூ. 88,000 கோடி கடனை ஜப்பான் வழங்கவிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.