மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஃபட்னாவிஸ் ரகசியமாக முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதனால் மூன்று கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளன.
அண்மையில் நடைெபற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சுழற்சி முறையில் இரு கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் சிவசேனா வலியுறுத்தியது. இதனை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரசுடனும் காங்கிரசுடனும் பேச்சு நடத்திவந்தது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், ரகசியமாக பாஜகவுடன் பேரம் பேசி நேற்று துணை முதல் வராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
அஜித் பவாரின் இந்தச் செயலை சற்றும் எதிர்பார்க்காத சரத் பவார், சிவசேனா கட்சியினர் அஜித் பவார் குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், “மகாராஷ்டிரா மக்களின் முதுகில் குத்திவிட்டார் சரத்பவாரின் மருமகன் அஜித் பவார். அமலாக்கத் துறையின் விசாரணையிலிருக்கும் அவர் பயந்துபோய் இந்தச் செயலை செய்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடன் சரத்பவார் தொடர்பில்தான் இருக்கிறார்,” என்றார்.
இதற்கிடையே சரத் பவாரின் மகளும் அஜித் பவாரின் மனைவியுமான சுப்ரியா பவார், “குடும்பமும் உடைந்தது, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் உடைந்தது,” என்று வாட்ஸப் தகவலில் கூறியுள்ளார்.
“வாழ்க்கையில் யாரை நம்புவது? இதுபோன்று உணர்ந்ததே இல்லை. என்னுடைய வாழ்க்கையில் மோசம் போய்விட்டேன். அவரை பாதுகாத்தேன். அன்பு செலுத்தினேன். அதற்குத் திரும்ப என்ன கிடைத்தது, கட்சியும் குடும்பமும் பிளவுபட்டு விட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சரத்பவார், அஜித் பவாரின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, கட்சியின் முடிவு அல்ல என்றார்.
“அஜித் பவாருடன் 12 எம்எல்ஏக்கள் மட்டும்தான் சென்று உள்ளனர். அஜித் பவார் மற்ற எம்எல்ஏக்களையும் அழைத்து உள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் கட்சித் தாவல் தடை சட்டம் இருப்பதையும் அவர்கள் எம்எல்ஏ பதவியை இழக்கும் வாய்ப்பு அதிகம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
“தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் சேராது. இந்த விவகாரத்தில் சிவசேனா கட்சியுடன் இணைந்தே செயல்படுவோம்,” என்றார் அவர்.