புதுடெல்லி, அசாமில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மூன்று ஐஎஸ் பயங்கரவாதிகளை போலிசார் கைதுசெய்துள்ளனர்.
தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக கடந்த வாரம் உளவுத்துறை ரகசிய தகவல் ஒன்றை மத்திய உள்துறைக்கு அனுப்பியது.
புதுடெல்லி, அசாம் மாநில போலிஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அசாம் மாநிலத் தலைநகர் கௌகாத்தியில் நடத்தப்பட்ட சோதனையில் பயங்கரவாதிகள் மூவர் அசாம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது பெயர் முகாதீர் இஸ்லாம், ரஞ்சித் இஸ்லாம், ஜமீல்லூயிட் என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்பட்டது.
பெங்களூரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்ற இவர்கள் குண்டு வெடிப்பை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
கைதான இம்மூவரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது அங்கு வெடிகுண்டுகள், வெடிபொருள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாள்கள், கைபேசிகள், வரைபடங்கள் ஆகியவையும் அங்கு கைப்பற்றப்பட்டன.
இந்த பயங்கரவாதிகள் பிடிபட்டதால் மிகப்பெரிய நாசவேலை தவிர்க்கப்பட்டு இருப்பதாக டெல்லி போலிஸ் துணை ஆணையர் பிரமோத்சிங் தெரிவித்தார்.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆன்மிக நிகழ்ச்சியைச் சீர்குலைக்க இம்மூவரும் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.
புதுடெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் வெடிகுண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
கைதான 3 ஐஎஸ் பயங்கரவாதிகளில் ஜமீல்லூயிட் என்பவன் அசாம் மாநிலத்தில் ஆதார் மைய கண்காணிப்பாளராக இருந்ததாகவும் ரஞ்சித் இஸ்லாம் மீன் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக இருந்ததாகவும் கூறப்பட்டது.
இன்னொரு பயங்கரவாதி முகாதீர் இஸ்லாம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததாகவும் இம்மூவரும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் மூலம் ஒன்று சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity