மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பதவி ஏற்கிறார். இந்நிலையில் முதல்வராவோம் என தாம் கனவிலும் நினைத்தது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டணி சார்பில் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் செய்தியா ளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, கடந்த 30 ஆண்டுகளாக தங்களுடன் நட்பு பாராட்டியவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றார்.
“யாரை எதிரிகள் என்று கருதி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்தோமோ அவர்கள் இப்போது நண்பர்களாகி உள்ளனர். மாறுபட்ட கொள்கைகள் கொண்டவர்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்,” என்றார் உத்தவ் தாக்கரே.
தம் மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாஜக கூட தம் மீது இந்தளவு நம்பிக்கை வைத்ததில்லை என்றார்.
மாறாக, பாஜக தரப்பு தம்முடன் வெறுப்பு அரசியல் நடத்தியதாக விமர்சித்தார். தேவை ஏற்படும்போது மட்டும் பாஜக தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, மற்ற சமயங்களில் பாஜக தலைமை தன்னைக் கண்டுகொண்டது இல்லை என்றார்.
சிவசேனாவின் நட்பையும் தேவையையும் பாஜக எப்போதுமே உதாசீனம் செய்து வந்ததாக அவர் சாடினார். பதவியேற்ற பின் தனது மூத்த சகோதரரை (பிரதமர் மோடி) சந்திக்க இருப்பதாக தாக்கரே கூறினார்.
முதல்வராகத் தேர்வு பெற்றுள்ள உத்தவ் தாக்கரே, தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதி சார்பாக எம்எல்ஏ ஆக வேண்டும்.
இதையடுத்து சிவசேனா எம்எல்ஏக்களில் யாரேனும் ஒருவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று காலை சந்தித்துப் பேசினார் உத்தவ் தாக்கரே.
இதையடுத்து இன்று மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா திடலில் நடைபெற உள்ள விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அஜித்பவார் கலந்து கொண்டார். அக்கட்சித் தலைவர் சரத் பவாரின் சகோதரரான இவர், கடந்த வாரம் திடீரென பாஜகவுடன் கைகோர்த்து முதல்வர் பதவியும் பெற்றார். எனினும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே பாஜக அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து துணை முதல்வர் பதவியை விட்டு விலகிய அஜித் பவார், நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் கட்சியை விட்டு விலகவில்லை என்றும், அதனால் கட்சியில் மீண்டும் சேர்வது குறித்து கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.