காதலிக்க மறுத்த இளையர்மீது அமிலத்தை வீசியதாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகில் உள்ள ஜகட்புரைச் சேர்ந்த அலேக் பரிக் நேற்று முன்தினம் இரவு, பக்ரி சஹி என்ற இடத்தில் இளம் பெண் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
சில நிமிடங்களில் அவரது அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது கீழே விழுந்து கிடந்த அலேக், தன்னுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் தன்மீது அமிலம் வீசியதாகக் கூறிக் கதறினார்.
அருகில் உள்ள மருத்துவமனையில் அலேக்கை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலிசார் அலேக்கிடம் விசாரணை நடத்தினர்.
தன்னை அந்தப் பெண் காதலித்ததாகவும் தனக்கு அவர் மீது நாட்டம் இல்லை என்று கூறியதால், ஆத்திரத்தில் அமிலத்தை ஊற்றியதாகவும் தெரிவித்தார் அலேக்.
ஆனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், இருவரும் காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அமிலம் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity