சண்டிகார்: மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு பொருள், சேவை வரிக்கான பங்கை தரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத வகையில் சரிவு அடைந்துள்ள வேளையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா சண்டிகாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
தற்போது நாட்டில் பொருளியல் நெருக்கடி நிலையைப் போன்றதொரு நிலை நிலவி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். “மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய பொருள், சேவை வரி பங்கை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை? நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ. 720,445 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட் மதிப்பீடு கூறி உள்ள நிலையில், அக்டோபர் இறுதியில் நிதி பற்றாக்குறை 102.4 விழுக்காடு என்ற நிலையை அடைந்துள்ளது,” என்று ரன்தீப் சிங் கூறினார். மேலும், மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு பொருள், சேவை வரிக்கான பங்கை தரவில்லை என்பதே இதன் பொருள்” எனவும் அவர் சொன்னார்.
மோடி: பொருளியல் வளர்ச்சிக்கு நடவடிக்கைகள்
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 30ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது தலைமையில் 2-வது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து சனிக்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் ‘முதல் 6 மாதங்களில் இந்தியா’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“கடந்த 6 மாத காலங்களில் மேம்பட்ட வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தவும் நாங்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். 370-வது சட்டப்பிரிவுக்கு முற்றுப்புள்ளி முதல் பொருளியல் சீர்திருத்தம் வரை, ஆக்கபூர்வமான நாடாளுமன்றம் முதல் தீர்மானமான வெளிநாட்டு கொள்கை வரை வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
“மேலும் வரவிருக்கும் காலங்களில் இன்னும் அதிகமானவற்றைச் செய்ய ஆவலுடன் இருக்கிறோம். இதன்மூலம் நாங்கள் வளமான மற்றும் முன்னேறிய புதிய இந்தியாவை உருவாக்க முடியும்,” என்றும் திரு மோடி கூறினார்.
அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற எண்ணத்தால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் ஆசியுடன் ‘வளர்ந்த இந்தியா, 130 கோடி இந்தியர்களின் மேம்பட்ட வாழ்க்கை’ ஆகியவற்றை முன்னெடுத்து புதுப்பிக்கப்பட்ட வலிமையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார்.
பிரதமரைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டுவிட்டரில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
“பிரதமர் மோடி தலைமையிலான 2-வது அரசு நேற்றுடன் 6 மாதகாலத்தை நிறைவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் பல கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விடை காண்பது, தலையீடுகள் என பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடரும்” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.