டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியான நிர்பயாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் நால்வருக்கு தூக்குத் தண்டனை உறுதியாகியுள்ள நிலையில், திகார் சிறையில் இருக்கும் அவர்களைத் தூக்கில் போட ‘ஹேங்மேன்’ இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் கைதான அறுவரில் ஒருவர் சிறார் என்பதால் தண்டனையில் இருந்து தப்பினார். ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறைக்குள் அடித்துக் கொல்லப்பட்டார்.
பவன் குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்தது. அவர்களது கருணை மனுக்களை டெல்லி ஆளுநர் தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற உத்தரவுப்படி நால்வரையும் தூக்கில் போடவும் பரிந்துரைத்தார்.
இதையடுத்து அந்த நால்வரின் கருணை மனு மத்திய உள்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் இந்த மனுக்கள் மீதான ஆய்வு முடிந்து, அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
குற்றவாளிகள் எந்த நேரத்திலும் தூக்கில் போடப்படலாம் என்ற நிலையில், திகார் சிறையில் குற்றவாளிகளைத் தூக்கில் போட ஊழியர் இல்லாததால் சிறை நிர்வாகத்தினர், அதற்கான ஊழியரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
திகார் சிறையில் குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கென்று நிரந்தர ஊழியர் கிடையாது.
குற்றவாளிகளைத் தூக்கில் போடும் பணிக்காக ஒப்பந்த ஊழியர் நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity