புதுடெல்லி: பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. பொருளாதார பிரச்சினை என்ன என்பதையே பாஜக அரசு புரிந்து கொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சிறைக்கு சென்ற அதே நேரத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரமும் மிக மோசமான நிலையை அடைந்தது. இந்தியாவின் இரண்டு காலாண்டு ஜிடிபி மிக மோசமான சரிவை சந்தித்தது. அதேபோல் ஆட்டோமொபைல் துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.
இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், 106 நாட்களுக்கு பின் உங்களுடன் பேசுகிறேன். இங்கு உங்கள் முன்னிலையில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீதிமன்றம் மீதும் மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மிக்க நன்றி. என்னுடைய பிரச்சினை இருக்கட்டும், இப்போது பொருளாதாரம்தான் முக்கியம். பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. பொருளாதார பிரச்சினை என்ன என்பதே இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
அதனால்தான் பொருளாதார பிரச்சினைக்கு அவர்களால் தீர்வுகாண முடியவில்லை. நோயைக் கண்டறிந்தால்தான் மருந்து தர முடியும். இவர்கள் நோயையே கண்டறிய தவறி விட்டனர்.
பாஜக அரசால் என்ன பிரச்சினை என்பதை யூகிக்க முடியவில்லை. மத்திய அரசின் மிக மிக மோசமான முடிவுகளால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. பணமதிப்பிழப்பு, வரி கொள்ளை, மோசமான ஜிடிபியால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
நல்ல நாள் வரும் என்று கூறிவிட்டு ஏமாற்றிவிட்டார். எல்லா துறையும் சீரழிந்துவிட்டது.
மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் பாஜக அரசு அதன் தவற்றை மக்களிடம் ஒப்புக்கொள்ளவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8%ல் இருந்து 5% வரை குறைந்தது எல்லாம் அநியாயம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் தடுக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விடுதலையான மறுநாளான நேற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார்.
வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரமும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்துக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
பின்னர் அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
“நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்காமல் மத்திய அரசால் தடுக்க முடியாது,’’ எனக் கூறினார்.